Sunday 27 September 2020

மறுமை

 ஒன்றுமே புரியவில்லை. ஏகப்பட்ட வரிசைகள். உள்ளதிலேயே சிறியதாகத் தெரிந்த ஏதோ ஒரு வரிசையில் நின்று கொண்டு இது என்ன வரிசை என்றேன். பதிலில்லை. ஒருவேளை காது கேட்கவில்லையோ என்று நினைத்தவன்

முன்னால் நின்றிருந்த  முகமற்ற உருவத்தை மெல்லச் சீண்டி தமிழ் தெரியுமா என்றேன். 


திரும்பியது. என் நெற்றியை உற்றுப் பார்த்தது.

என் மூளையில் ஏதோ மின்னல். அடுத்த கணம் யாரோ நான் சிங்கம் இது சிங்க வரிசை. நீ மனிதனா அப்போ வலது பக்க பக்கம் ஆறாயிரத்து நாற்பத்தைந்தாவது  வரிசைக்குப் போய் நில்லு என்றொரு குரல் கேட்டது.


வாய் திறந்து பேச அவசியம் இல்லை. வரிசைகளில் நிற்கும் உருவங்களின் நெற்றியை நேராகப் பார்த்து நம் வினாவை நினைத்தாலே விடையை மூளைக்கு யாரோ தெரிவித்தார்கள்.


எப்படியோ பல உருவங்களை உற்று நோக்கி கேள்வி எழுப்பி பதிலைப் பெற்று ஒரு வழியாக  கௌண்டர் எண் 474231965 வந்தடைந்தேன்.

வரிசையை கண்டு பிடித்துச் சேர்ந்து கொண்ட போது "யோவ் யாருய்யா ஊடால பூரரது" என்று மண்டைக்குள் ஏகப்பட்ட சத்தம். 


யாரோ கையைப் பிடித்து இழுத்த மாதிரித் தெரிந்தது.மரியாதை கெட்ட இடமாக இருக்கிறது. 


நாம் எத்தனை செல்வாக்கான ஆசாமி. இங்க வந்தா ஒரு வரவேற்பு வளைவு கூட இல்லை. என்ன ஜனங்க என்னை மறந்து விட்டார்களா என்று நினைத்த போது 

மீண்டும் மூளைக்குள் ," புதுசா, மொதல்ல ஒண்ணா நம்பர் கௌண்டரில போய் பாஸ்புக் வாங்கிக்க" என்று கட்டளையிட்டது.


ஒண்ணா நம்பர் கௌண்டரில் கூட்டம் அலை மோதியது. கௌண்டரில் வரிசை படு வேகமாக நகர்ந்தது. கௌண்டரில் இருந்த பெண்ணுக்கு ரவிவர்மா வரைந்த ரம்பையின் சாயல் இருந்தது.


சிரித்தபடி கையில் ஒரு புத்தகத்தைத் திணித்து " வெல்கம்" என்றாள்.

அப்பாடா, ஒரு பின்னாளில் நேரமிருந்தால் கரைக்ட் பண்ண நம்ம **** வட்டம் மூலம் ஏற்பாடு பண்ணி வேண்டும். நினைப்போடியதுமே பின் மண்டையில் யாரோ அடித்த மாதிரி இருந்தது. கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.


ஓ. இங்கே இது தப்பு போலிருக்கு. எல்லாம் விசித்திரமாக இருக்கு என்று நினைத்தபடி அந்த பாஸ் புக்கை பிரித்துப் பார்த்தேன்.

ஒன்றுமே எழுதியிருக்கவில்லை. மறுபடியும் மூளையில் கட்டளை "பாஸ் புக்கில் 

 எண்ட்ரி அதோ அந்த கியாஸ்க்கில் பெயர் ஊர் எண்டர் பண்ணி போட்டுக் கொண்டு வா" என்றது.


நல்ல வேளை கியாஸ்கில் அதிகம் கூட்டம் இல்லை. வரிசையில் எனக்கு முன் நின்றவரை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அரை மணி நேரம் இருக்கும். இன்னும் அவர் எண்ட்ரி முடியவில்லை.

செம கடுப்பில் ," யோவ் , சீக்கிரம் போட்டுக்கிட்டுப் போவியா. மத்தவங்க போடத் தாவல" என்று நினைக்கவும் அந்த உருவம் திரும்பியது.

அட நம்ம *******மாவட்டம். "யோவ் மானா செனா எப்படியா இருக்கே என்று கேட்க நினைத்தேன்".  மறுபடியும் பதில் மண்டைக்குள்" தலைவா நீங்க எப்போ இங்கே வந்தீய. சாதாவா கொரோனாவா ". 

நா கொரோனா. நீங்க எப்படி"?


அதற்குள் மானா செனா பாஸ்புக் எண்ட்ரி முடிந்து கியாஸ்க் மிஷின் துப்பியது.

என் பாஸ்புக்கை மெஷினில் செருகியதும் திரையில் பெயர் என்றது

மாண்புமிகு.டாக்டர். *******இனக்காவலர் என்று அடைமொழி  எல்லாம் போட்டு உள்ளிட்டால் தவறான தகவல்கள் என்று துப்பியது.

எனக்கே மறந்து போன தாய், தந்தை வைத்த பெயரை உள்ளிட்டதும் ஏற்றுக் கொண்ட மெஷின் அடுத்துக் கேட்டது " இறந்த நாள்".

Wednesday 27 February 2019

சொர்க்கவாசல்

51) குளித்து மஞ்சள் குங்குமம்
மலர் மாலை மங்களகரமாக
அனைத்து ஆன்மாக்கள் நாள் கல்லறைகள்.


52) சத்தம் இல்லாமல் வருகிறது 
தீபாவளிப் பண்டிகை
பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடு.



53) எவ்வளவோ கட்டுப்படுத்தியும்
ஓசை அடங்கவே இல்லை
ஆசிரியர் இல்லா வகுப்பறை.



54) புகைந்தபடியே உள்ளது
இன்னும் வெடிக்கவில்லை
மாமியார், மருமகள் சண்டை.



55) எவ்வளவு சுட்டாலும்
ஆசை தீரவில்லை 
புதுப்புதுத் திட்டங்கள்.


56) திரையரங்கில் பாலாபிஷேகம்
கீழே மெல்ல ஊர்கின்றன
சாலையில் வாகனங்கள்.



57) பொது நடைமேடை 
கடைகளுக்கு இடமே இல்லை
இருசக்கர வாகனங்கள்.



58) கோணி போட்டு முகம் மூடி
இறுகக் கட்டியிருந்தது
திறப்புவிழா நடக்காத சிலை.



59) பலநாள் சுற்றிக் கரை கடந்தது 
வேகமாக நகர்ந்து பலமாகப் பொழிந்தது
முகநூலில் வதந்தியும் பொய்களும்.



60) எண்ணெய் இட்டதும்
கவிபாட மறந்து போனது
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி.



61) சொர்க்கவாசல் கதவு 
மெல்ல யாரோ திறக்க 
உள்ளே யாருமில்லை.



62) அத்தனை நட்சத்திரங்களும் நிலவும்
அள்ளி அள்ளி உண்டாலும் 
தீர்ந்து போகவில்லை இருள்.



63) தோலுரித்துக் காட்டியும்
குழப்பமே மிஞ்சியது
கைப்பற்றப்பட்ட மாமிசம்.



64) தினந்தோறும் கரு மை பூசி
முதுமையை மறைக்க முயற்சி
தோற்றுப் போகிறது காலம்.



65) பகலில் ஊருக்காக ஓடி ஓடி உழைப்பு 
இரவில் நிராதவாய்ச் சாலை ஓரம் ஓய்வு 
அழைப்பு மகிழ் உந்துகள்.



66) இறப்புக்குப் பின்னும் 
தொங்கலில் வாழ்க்கை
கசாப்புக் கடை.



67) வாடிக்கையாளர்கள் இறைவன்
கடப்போருக்கு பத்ர அரச்சனை 
அங்காடி வாழையிலைக் கடை.



68) கட்டண நிறுத்தமே வாய்ப்பதில்லை
சிறுநீர் நடைபாதையே வாய்க்கிறது
பணக்காரர்களின் சொகுசு உந்துகளுக்கு.



69) சூடான கல்லுக்கும் கரண்டிக்கும் போர்
வீரமரணம் அடைந்தது மாவீரன் மாவு 

உடலெங்கும் விழுப்புண்கள்.


70) சுடப்பட்டு இறந்தது மாவு
உடல் முழுவதும் துளைகள்
தோசையாய் மறுபிறவி.



71) இரங்கல் பேரணி
தொண்டர்கள் அஞ்சலி
உணவகத்தில் சுட்டு.



72) காற்று மாசு எதிர்ப்புப் போராட்டம் 
கட்சித் தலைவர்களுக்கு வரவேற்பு
பத்தாயிரம் வாலா முழக்கத்துடன்.


73) பட்டை திருநீறு குங்குமம் 
ஆத்திகக் கோலத்தில்
ஆயுத பூசை அலமாரிகள்.


74) நதியின் புனித நீராட்டு விழா 
முடியக் காத்திருந்தன
உள்ளூர் கனரக வாகனங்கள்.


75) ஊரெங்கும் ஒளி வெள்ளம்
ஏழைப் பங்காளர் இல்லத் திருமணம்
இருண்டு கிடந்தது ஏழையின் இல்லம்.


76) ஒன்பது நாள் கால்கடுக்க நின்றன
ஓராண்டு உறக்கம் கொள்ள
கொலு பொம்மைகள்.


77) தண்ணீர் ஊற்ற ஊற்ற
அதிவேகமாய் வளர்ந்தது
வயிற்றுப் பசி.


78) எவ்வளவோ தண்ணீர் விட்டும்
அணைக்க இயலவில்லை
வயிற்று நெருப்பு.


79) கையில் கத்தி
வருகைக்கு காத்திருப்பு
மேலை நாட்டு உணவகம்.


80) செருப்பு கட்டிய முருங்கைமரம்
அவமானத்துடன் கோபம்
சாட்டையாய் காய்கள்.


81) தலைவர்கள் வீட்டு சுற்றுச்சுவர்
சுத்தமாக வெள்ளையாய் 
தெரு நிறைந்து விளம்பரங்கள்.


82) செல்லுமிடம் அறியவில்லை
ஊர்வலத்தின் காரணகர்த்தா
இறுதி ஊர்வலம்.


83) வெளிநாடுகளில் பிள்ளைகள்
இந்தியாவில் பெற்றோர்
விற்கப்பட்ட தெய்வச் சிலைகள்.


84) நொடிக்கொரு முறை கோவிந்தா
பகுத்தறிவு தலைவர்
தனி உதவியாளர் அழைப்பு.


85) விலக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை
தள்ளிப் போனது இடைத்தேர்தல்
கொட்டவில்லை பணமழை.

86) ராமனையும் சீதையையும் 
சேர்த்து வைத்தது
சிலைக் கடத்தல் தடுப்புத்துறை.


87) பலங்கொண்டு அடிக்க அடிக்க 
நிற்காமல் அதிகமாகிறது 
கோவில் மணி ஓசை.


88) மழையில் நிரம்பியது அற்றகுளம்
சோகத்தில் சிறுவர்கள் 
விளையாட மைதானம் இல்லை.


89) சுற்றுச்சூழல் சீர்கேடு
மௌனமாகக் கண்ணீர்
அறை குளிர்பதனக் கருவி.


90) தெருப் பெயர் பலகை
வழிகாட்டியது மறுமைக்கு
ஒட்டப்பட்ட சுவரொட்டி.


91) நேற்று தொடங்கியது தேர்வு
முன்னரே தரப்பட்டது மதிப்பெண்
ராசிகளுக்கு குரு பெயர்ச்சி.


92) ஊர் மந்தை ஆலமரத்தடி
ஒன்றாகவே ஆடும் புலியும்
விளையாட யாருமற்ற கட்டம்.


93) எளிதாக வந்தது
கொழுத்த லாபம்
வடையில் பெரிய துளை.


94) பையில் விற்காத முகமூடிகள்
மறைக்காமல் காட்டுகிறது
விற்பவரின் சோகம்.


95) திரண்டதும் அடித்துக் கலைப்பு 
முழங்கினாலும் போராட்டம் இல்லை
வானில் கரு மேகங்கள்.


96) வல்லவனுக்கு வல்லவன்
தனியார் பள்ளியில் பெட்டியை 
உடைத்துக் கொள்ளை.


97) படைத்தவனுக்குப் படையல்
நாலு வரி நோட்டு 
தலையெழுத்து சரியில்லை.


98) மேடு பள்ளங்கள் இல்லை
பிடிப்பின்றி ஓடுகிறது 
தேய்ந்து போன டயர்.


99) தரம் பார்க்காமல் எடுத்துச் செல்ல 
மூட்டை மூட்டையாக இலவசங்கள் 
முகநூலில் பொய்த் தகவல்கள்.


100)  சாலை நடைமேடைக் கொலு 
வரிசையாய் பொம்மைக் கடைகள்
பக்கத்து உணவகத்தில் சுண்டல்.


Tuesday 26 February 2019

முதல் மணி

1) முதல் மணி அடித்து விட்டது
நேரமாகி விட்ட பதைபதைப்பு
கோவிலில் நுழைகிறார் இறைவன்.



2) கிழட்டு கடலலைக்குப் பார்வை மங்கல் 
தினம் வரும் என்னை வந்து வந்து பார்த்து 

அடையாளம் தெரியாமல் திரும்புகிறது.


3) பிறவிப் பெருங்கடல் கடக்கப் பயிற்சி
பிறவி எடுக்க பெருங்கடல் 
நீந்திக் கடக்கும் உயிரணுக்கள்.



4) வேகமாக வந்து தாக்கியதும்
திசைக்கொன்றாக சிதறி ஓட்டம்
கேரம் விளையாட்டு காய்கள்.



5) அடிபட்ட வெண்புறா மாற்றாக
அரிந்து தரப்பட்டது தொடை 
மாமிச விற்பனைக் கடை.



6) நின்று தேங்கி மெல்ல ஓடுகிறது
பாதை சரியில்லை
மணல் எடுத்த நதியில் நீர்.



7) பேசாத வியாபாரி
கூவிக் கூவி விற்பனை
ஒலிப்பானில் பதிவிட்ட விளம்பரம்.



8) மாம்பழம் கிடைக்க வாய்ப்பில்லை
இருந்தும் விடாமல் உலகை
சுற்றுகிறது சந்திரன்.



9) முள்ளிலிருந்து விடுபட்டதும்
மகிழ்ச்சியில் துள்ளுகிறது
கூடையில் போடப்பட்ட மீன்.


10) அந்தகனின் பிச்சைப் பாத்திரம்
குலுக்கியதும் துள்ளிக் குதிக்கின்றன
செல்லாக் காசுகள்.



11) வீட்டுக்குச் செல்ல நேரமாகி விட்டதோ 
மணி பார்த்துக் கொண்டிருந்தது
மணிக்கூண்டில் மாலைச் சூரிய ஒளி.



12) பல இடங்களில் வேகம்
சில இடங்களில் நின்று பயணம்
தொடுதிரை கைபேசியில் விரல்.



13) தினந்தோறும் காதலர் தினம் 
கை நிறையக் காதல் பரிசுகள்
காற்று சுமந்த மகரந்தங்கள்.



14) யாருக்கும் கெடுதல் செய்யவில்லை
அடித்துத் துரத்த மகிழ்ச்சி ஆரவாரம்
கிரிக்கெட் விளையாட்டில் பந்து.


15) காற்று வந்து கட்டி அணைக்க
வாழ்வை முடித்துக் கொண்டது
துடித்துப் போன தீபச் சுடர்.



16) ஆவேசமாய் கட்டி அணைக்க
வந்தது சூறைக்காற்று
நடுங்கியது தீபச் சுடர்.



17) காதலர் தினம் 
பூங்காவில் கையில் தாலியுடன் 
பண்பாட்டுக் காவலர்கள்.



18) நாளை காதலர் தினம்
இன்றைக்கே வானில் பறந்த
ஏற்றுமதியான ரோஜா மலர்கள்.



19) அடி மேல் அடி வைத்து 
யோசனையுடன் இடதும் வலதுமாய் 

உலாவுகிறது கவிஞனின் பேனா.


20) தலை விரித்துச் சாமியாடியது
பேய் பிடித்ததாக நம்பப்பட்ட
ஒற்றைப் பனை தேரிக் காற்றுக்கு .



21) நீர் இன்றி வாடவில்லை
அழகான வண்ண மலர்கள்
பீங்கான் சாடியில் நெகிழிச் செடிகள்.



22) மருத்துவமனையில் இறப்பு அறிவித்ததும் 
கொளுத்திய கையோடு புதுசாய் சித்தி 
பழையன கழிந்து புதியன புகுந்த போகிப் பண்டிகை.



23) உள்ளே போய் வெளியே வருபவர்கள் 
பட்டணத்தார் போன்று மாற்றம்
நியாய விலைக்கடை பொங்கல் பரிசு.



24) இரவுக்கு ஆயிரம் கண்கள்
எல்லாக் கண்களிலும் மையெழுதி
கருத்திருக்கிறது வானம்.



25) விண்மீன்களுக்கு நூறு சதம் இட ஒதுக்கீடு
கோபத்தில் வரவில்லை நிலா
கருப்பு அணிந்த வானம், அமாவாசை.



26) மௌனமாக கை கழுவ
மேசை மீது காத்திருந்தது ரசீது
கை விடப்பட்ட நோயாளிக்கு.



27) புண்ணிய நதிகளில் நீராட
வேகமாகக் கரைந்தது
பக்தனின் குளியல் சோப்பு.



28) மார்கழி மாத சபா இசை நிகழ்ச்சிகள்
எதிர்பார்த்து ஏங்கிய ஆர்வலர்கள்
சிற்றுண்டிச் சாலை உணவு வகைகள்.



29) புத்தாண்டின் முதல் ஏமாற்றம்
பல் பொருள் அங்காடியின் அறிவிப்பு
"ஆயிரம் ரூபாய்க்கு மேல் இலவச தின நாள்காட்டி".



30) சுண்ணாம்பு காணாத சுவர்கள்
வீட்டின் வறுமையை மறைக்க
புதிய நாட்காட்டி கிடைக்கவில்லை.



31) அழகான இதழ்களைக் காட்டி மயக்கி
திருட்டுத்தனமாகக் குடித்துத் தீர்க்கின்றன
குளத்து நீரைத் தாமரை மலர்கள்.



32) நடைபாதை கிருஸ்மஸ் மரம்
புதிய கிழியாத காலுறைகள்
கட்டிச் சென்றார் சாண்டா தாத்தா.



33) நடுநிசியில் ஆலய மணி ஒலி 
திடுக்கிட்டு விழித்த கடவுளர்கள்
ஆங்கிலப் புத்தாண்டு தினம்.



34) ஆங்கிலப் புத்தாண்டு பலன்
திருவாதிரைக்கு வெளிநாடுபயணம்

கடத்தப்பட்டது நடராசர் சிலை.


35) ஆங்கிலப் புத்தாண்டு தின நடுநிசி
அமைச்சர்கள் முகத்தில் விழிக்க
காத்துக் கிடந்தனர் இந்துக் கடவுளர்கள்.



36) நட்டாற்றில் மண்குதிரை
பயமின்றி அய்யனார்
ஊர் முழுதும் பெரு வெள்ளம்.



37) தினந்தோறும் கோடிகளில் புரண்டும்
அதிகமாக ஒன்றும் ஒட்டவில்லை
பங்குச் சந்தை வியாபாரம்.



38) சாய்ந்து சுவரோரம் ஓய்வு
ஊனமுற்ற இரப்பவனின்
செயற்கைக் கால்கள்.



39) அலங்கார சிம்மாசனத்தில்
அழுக்கு உடைக் காவலன்
ஆளில்லா திருமண மண்டபம்.



40) இக்கரையும் அக்கரையுமாய்
அலையும் மேய்ச்சல் மாடோ
காலம் மேயும் கடிகார ஊசல்.



41) அங்குமிங்கும் அலைந்து
காலத்தைக் கழிக்கும் கடிகார ஊசல்
கைவிடப்பட்ட பெற்றோரோ?



42) இடதும் வலதுமாய் ஓடி ஓடி 
அலைகிறதே இந்த கடிகார ஊசல்கள்
தேர்தல் கூட்டணிக்கு முயற்சியோ?



43) காத்திருக்கும் காதலனோ 
பொறுமையின்றி இடதும் வலதுமாய்
அலைகிறதே கடிகார ஊசல்.


44) அங்குமிங்கும் அலைகிறதே
இந்த கடிகார ஊசல்கள்
தேடுபவர் கிடைக்கவில்லையோ?



45) ஆயுதம் காட்டாமல் அகிம்சை மிரட்டல்
தேர்வடச் சங்கிலி கட்சிக்கரை வேட்டி 

சட்டைப்பைக்குள் சிரிக்கும் தலைவர்கள்.


46) பொது மக்கள் தங்கள் கோரிக்கைகள் 
போராடாமல் அகிம்சையாக நிறைவேற 

சட்டைப்பையில் கனக்கிறார் தேசப்பிதா.




47) பள்ளிக் கூடத்தில் ஒதுங்கினர்
ஏட்டுக்கல்வி கற்காத பாமரர்கள்
புயல் நிவாரண முகாம்.


48) பூங்காவில் காலியாக இருக்கைகள்
காதல் சோடிகள் யாருமில்லை
அந்தி நேரத்தில் மழை.

49) இரவு முழுவதும் வானும் மண்ணும்
வாய் ஓயாது ஆசையாய் பேசியது
செய்தியில் கனமழை.

50) ஒன்றுக்குப் பத்தாகத் தலைகள்
சிந்திக்கத் தோன்றவில்லை
இலங்கை வேந்தன்.







Saturday 10 March 2018

முகநூல் கிறுக்கல்கள் - 10


1) எத்தனை வயதாகி விட்டது 
இருந்தாலும் பாருங்களேன் 
இந்த கிழட்டுக் காலத்தை
துளியும் வெட்கமில்லாமல் 
கடிகாரத் தண்டுல் அமர்ந்து
சிறு பிள்ளையைப் போல ஊஞ்சலாடுகிறது.


2) உருட்டும் விழியோ, ஓங்கிய அரிவாளோ
இன்றி சிரித்தவாறே மிரட்டின
வெண் சட்டைப்பையில் அரசியல் தெய்வங்கள்.


3) நடைபாதை குடிசை வீடு
கூரை 15×10 ஃப்ளக்ஸில் 
"அனைவருக்கும் இல்லம்".


4) தலைக்கவசம் அணியாதவரை 
துரத்திச் சென்ற காவலர் அவசரத்தில்
தலைக்கவசம் அணியவில்லை.


5) இந்த காலம் ஏன் இப்படி கனக்கிறது.
எத்தனை கோடி பேர்களின் உழைப்பு
தேவைப்படுகிறது சற்றே நகர்த்த.


6) என்ன ஆயிற்று இந்த வெள்ளை
ஒளிக்கு? இப்படி மேகத்தைக் கண்டதும்
ஏழு வண்ண சிறகு விரித்து மயிலாகி விடுகிறதே.


7) ஆழ்மனத்தின் அம்மணம்
மூடி மறைக்கும் ஆயத்த ஆடை
உபசார வார்த்தைகள்.


8) சாலையோரம் நிர்வாணமாய் செத்துக்
கிடந்தவனை உற்சாகமாக வழியனுப்ப 
வழியேற ஆறுக்கு நாலு கட்சிக் கொடிகள்.


9) கறுப்பையும் வெள்ளையையும்
மறைத்துக் கொண்டன தடுப்புச்சுவரில்
ஒட்டிய தலைவர்களின் சுவரொட்டிகள்.


10) காலாகாலத்தில் வரச் சொன்னாள் தாய்,
காலா சுவரொட்டி ஒட்டியே காலம்
முழுவதும் கழிந்தது ரசிக மகனுக்கு.

11) பறவைகளைப் பறக்கவிட்டேன்
நிலமெங்கும் விருட்சங்கள்.
கூண்டில் அடைத்து வைத்தேன்
வீடெங்கும் நாறும் எச்சங்கள்.


12) அனுதினமும் ஹோலிதான்
வண்ண முகத்துடன் ஒடுகிறாள்
மகிழ்ச்சியின்றி அமராவதி.


13) பட்டினி கிடந்தவனின் தட்டில் 
அரசுகள் இட்ட அறுசுவை விருந்து,
புளித்துப் போன புள்ளிவிவரங்கள்.


14) மழலைகளின் அழுகுரல்
இறைவன் விண்ணில், இடையில் 
இரைச்சலுடன் போர் விமானங்கள்.


15) அழுத பிள்ளைக்கு அரவணைப்பு
அழாத பிள்ளைக்கு சுரீர் அடி
பிரசவ அறை மருத்துவர்.


16) மகிழ்ந்தனர் பாண்டியனின் 
ஊழல் அமைச்சர்கள்
மதுரையை கண்ணகி எரித்ததில்.


17) ஏகப்பட்ட ஆக்கிரமிப்பு கோவிலில்
புறநகரில் குடியேற 
ஆசைப்பட்டது தெய்வம்.


18) உரசி ஏரித்து விடக் காத்திருக்கும் 
எதிரிகள் இருபுறமும் வெளியே 
உறங்குது பெட்டிக்குள் தீக்குச்சிகள்.


19) கோவில் நிவேதனப் பொங்கலில்
கடவுள் தேடிய முந்திரிப் பருப்பு 
அதிகாரி வீட்டு பீங்கான் தட்டில்.


20) படுக்கையில் சிறுவர்கள் சண்டை
பஞ்சாக நீலவானில் பரவிக் 
கிடக்கும் மேகங்களின் ஓட்டம்.


21) ஒப்பனைக்கு தேர்வான 
பூசணிக்காய்க்கு வாய்த்தது
கண் திருஷ்டி அசுரன் முகம்.


22) கொக்கி போட்டு திருடாத
விளக்கு அலங்காரம்
இரவு வானில் விண்மீன்கள்.


23) கணவன் வரத் தாமதம்
கவலையுடன் மனைவி
ஆபத்தில் தொலைக்காட்சி நாயகி.


24) யூ ட்யூப் காணொலி பார்த்து
மகளுக்கு சேலைகட்டும் தாய்
அலுவலகத்தில் பாரம்பரிய உடைநாள்.


25) காலையில் பறக்கவிட்ட
விடுதலை நாள் வெண்புறா
மதியம் விருந்து மேசையில்.


26) குளிர் பதன அறையில் உறக்கம்
நடைபாதை வாசியின் ஆசை 
நிறைவேறியது சவக்கிடங்கில்.


27) அமைதியைத் தின்று 
தின்று வார்த்தைகள்
தடித்திருந்தன.


28) நாற்பதாண்டு கால சீரான ஓட்டம்
சில ஏழைகளின் வாழ்க்கை
வீராணம் குழாய்களில்.


29) அமைச்சர் பார்வையிட வந்த இடிந்து 
போன மயானச்சுவர், சுவரொட்டியில் 
"உங்கள் ராஜியம் சமீபமாயிருக்கிறது".


30) "நீ வருவாய் என நானிருந்தேன்" 
பின்புறத்தில் வாசகம்
இறுதிப் பயண வாகனம்.