Tuesday 10 October 2017

முகநூல் கிறுக்கல்கள் (2)

மண் உறுத்தாத சிப்பிக்குள்
முத்தும் 
தோல்வி உறுத்தாத காதலுக்குள்
கவிதையும்
உருவாவதே இல்லை.



தேரிக் காட்டு செம்மண் 
சாலையில் வேகமாகச்
செல்லும் வாகனங்கள் நொடிப்
பொழுதில் எழுப்பிய புழுதி
மெல்ல மெல்ல அடங்குவது போல
யாரோ சொன்ன தொடர்பற்ற
ஒரு வார்த்தை கிளப்பிய
விரும்பாத நினைவுகள் மீண்டும்
அடங்க அதிக நேரம் பிடிக்கிறது.



ஏறிப் பயணம் செல்ல வேண்டிய
பேருந்து தவிர்த்து பிற எண்
பேருந்துகள் வருவதொத்து
அவள் கனவுவர வேண்டி
துயின்றவனின் கனவில்
வரிசை கட்டி வந்தன
விரும்பாத வேறு பல கனவுகள்.



கானல் நீரில் வானவில்
தூண்டில் இட்டு விண்மீன்
பிடிக்கத் தகுந்த கொழுத்த புழு
இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை.



பனிக்கால குளிருக்கு
அடக்கமாக எச்சில் கூடு
சுற்றிக்கொண்டு
உறங்கிய புழுவிற்கு
மனிதன் சுடுநீர்க் குளியல் 
தந்து மீளா உறக்கத்தில்
ஆழ்த்தி போர்வையை
தந்திரமாக அபகரித்தான்.



கேளிக்கை நடன விடுதியில்
மேலாடைகளை ஒவ்வொன்றாகக்
களைந்து சுழற்சி வீசி வீசி
சுவாரசியத்தைக் கூட்டும்
நடனமாதாக வாழ்க்கை 
ஒவ்வொரு நாளாகக் களைந்து கொண்டு 

வந்து கிளர்ச்சியூட்டி
சற்றும் எதிர்பாராத ஒரு கட்டத்தில்
திடிரென்று முடிந்து விடுகிறது.


அவள் கனவிற்குள் தான்
வந்தது தெரியாமல்
செல்பேசியில் அவள்
முகநூல் பக்கத்தில் நட்பு
அழைப்பு தந்து கொண்டிருந்தான் அவன் .



வாயால் 'உஷ் உஷ்' என 
எத்தனை முறை எச்சரிக்கை செய்தாலும்
மறு நிமிடமே பேசத் துவங்கும் 
சிறுவகுப்புக் குழந்தைகளாக 
துணி துவைப்பவர் 'ஸ் ஸ்' என்று 
வாய்க்கு வாய் எவ்வளவு முறை 
அடக்கினாலும் துணியாலும் பாறையாலும் 
சப்தம் போடாமல் இருக்கவே முடியவில்லை.


போலீஸ் இல்லாத பாதசாரிகள்
கடக்கும் இடத்தில் சாலையை
மிகுந்த பிரயாசையுடன் கூட்டத்தோடு 

கூட்டமாக கடக்க யத்தனிக்கும் 
முதியவரை இரக்கமே இல்லாமல் 
படு வேகமாக ஒலிப்பானை உரக்க ஒலித்தபடி
 மோதுவது போல வரும் பேருந்துக்கு கொம்பு 
இருக்கிறதோ இல்லையோ ஓட்டுநர்களுக்கு 
நிச்சயமாக இருக்கிறது.


விண்வெளி மெத்தையில் 
உறக்கம் வராமல்
புரண்டு புரண்டு
படுத்திருக்கிறது பூமி.



ஒரு உடல் நீங்கி மறுஉடல்
என்று உடல்களில் நுழைந்தும்
நீங்கியும் பயணிக்கிறேன்
வித விதமாய் உடல்கள்
எனக்கு எதுவுமே சரியாக இல்லை
தூரதூரமாய் வெளிச்சம்
காலில் ஏதோ குத்திய வலி
குனிந்து ஒருகால் உயர்த்தி
கையால் பிடுங்கிப் பார்த்தேன்
உடைந்த நட்சத்திரத்தின் எச்சம்
தூக்கி அதனை ஏறிந்த போது பிரபஞ்சத்தின் 

எல்லை வந்துவிட்டது.
இன்னும் ஒருயுகம் திரும்பி நடக்க 

சலிப்பாக இருக்கிறது என்றால்
தற்கொலை செய்து கொள்ள
அண்ட வெளியில் எங்கே குதிப்பது?



2 comments:

  1. //கானல் நீரில் வானவில்
    தூண்டில் இட்டு விண்மீன்
    பிடிக்கத் தகுந்த கொழுத்த புழு
    இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை.//

    இவ்வரிகளை மிகவும் ரசித்தேன் நண்பரே வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அருமையான வரிகள்.

    கோ

    ReplyDelete