Friday 14 October 2016

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (6)

(51) "அண்டை நாட்டு விஷயமாக உங்கள் செயல்பாட்டைக் கண்டித்து சக்கரவர்த்தி அறிக்கை விட்டுள்ளாரே மன்னா. என்ன காரணம் மன்னா"
"ஒன்றுமே புரியவில்லை அமைச்சரே. அண்டை நாட்டரசர் திருநாடு ஏகியதாகத் தகவல் வந்தது. உடனே நல்லெண்ண நடவடிக்கையாக பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று பத்திரிக்கைகளில் முழுப்பக்கம் வாழ்த்தி விளம்பரம் கொடுத்தேன்"

 (52) "ஆமாம் அமைச்சரே,
இந்த அரசு இயந்திரம் சரியாக இயங்கவில்லை என்று ஒரேயடியாக பத்திரிக்கைகள் எழுதுகின்றனவே".
"அதுவந்து......மன்னா"
"என்ன வந்து நொந்து... உடனே எத்தனை புது இயந்திரங்கள் தேவை என்று கணக்கெடுக்கும் பணியைத் துவக்குங்கள்".

(53) "அமைச்சர்கள் அனைவருடைய கரங்களும் கறைபட்ட கரங்கள் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்களே, இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் அமைச்சர்களே"?
"அது மன்னா, அரசு இயந்திரங்களை பழுது பார்த்த போது அப்படிக் கறை ஆகி விட்டது."


(54) "என்ன அமைச்சரே, இந்த முறை பட்ஜெட்டில் புதியதாக வரி போட்டிருக்கிறீர்களே, அது எதற்கு"?
"மன்னர் மன்னா, அது அரசு இயந்திரங்கள் உராய்வின்றி இயங்க இனிமே நிறைய 'கிரீஸ்' மற்றும் மசகு எண்ணெய் எல்லாம் வாங்க வேண்டுமல்லவா".


(55) "அண்டை நாட்டரசரை நான் நம் கலாச்சார விருந்திற்கு அழைத்ததில் என்ன தவறு? அந்த நாட்டுப் பத்திரிக்கைகள் 'பரோட்டா கால்' தவறு என்று விமர்சிக்கின்றன.என்ன பிரச்சனை"?

"அது ப்ரோட்டக்கால் (Protocol) என்ற அரசாங்க நெறிமுறை அரசே"






(56) "அமைச்சரே, நம் இளவரசியின் சுயம்வரத்திற்கு எல்லா அண்டை நாடுகளுக்கும் தூதுவர்கள் மூலம் செய்தி அனுப்பி விட்டீர்களா?
"ஆம் அரசே, எல்லா நாட்டரசர்களுக்கும் இளவரசியின் பாரத் மேட்ரிமோனி புரொபைல் எண்ணை ஈ - மெயில் செய்து விட்டேன்"


(57) "அண்டை நாட்டரசர் என்னை போராளி என்று ஐக்கிய குறுநில மன்னர்கள் சபையில் பேசி என் புகழை உலகறியச் செய்தாராமே அமைச்சரே"
"அதுவா மன்னா, பதுங்கு குழியில் இருந்த படி கம்பு சுற்றி, உதார் விடுவதால், உங்கள் வீரம் முகநூல் போராளியை விட எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்று குறிப்பிட்டார்".



(58) "அமைச்சரே, அரண்மனையை Gated community ஆக மாற்றி விடுங்கள். ஆதார் அட்டை காட்டினால்தான் அனுமதி என்று உத்தரவிடுகிறேன்"?
"ஏன் மன்னா, இப்போதுள்ள காவல் போதுமே...... இன்னும் ஏன் கூடுதல் செலவு".
"நேற்று இரவு யாரோ ஒருவன் என்னைத் போல் உடையணிந்து என் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். நல்லவேளை நேற்றிரவு அரசியார் ஊரில் இல்லை". 



(59) "அரசே குடி நீர் பிரச்சனை தீவிரமாக உள்ளது. எங்கே பார்த்தாலும் ஒரே போராட்டமாகவே உள்ளது. என்ன செய்ய மன்னா"?
"மங்குணி அமைச்சரே, எல்லா மதுபானக் கடையிலும் ஒரு குவாட்டருக்கும் ஒரு பாக்கெட் தண்ணீர் இலவசமாக தந்தால் பிரச்சனை தீர்ந்து விடுமே". 



(60) "நவராத்திரி விழாவை முன்னிட்டுக் குடி மக்கள் மனம் மகிழ்ச்சியடைய ஏதோ அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வரச் சொன்னீரகளே மன்னா"?

"ஆம். அமைச்சரே, இனி ஆண்டு தோறும் எல்லா மதுபானக் கடைகளிலும் அந்த ஒன்பது நாட்களிலும் வாங்கும் குவாட்டர்களுக்கு 100 கிராம் கடலைச் சுண்டல் இலவசமாக வழங்கி குடி மக்கள் உடல் நலம் பேணப்படும் என்று உடனே அறிவியுங்கள்".

No comments:

Post a Comment