Wednesday 25 May 2016

தொண்டன் -2016.

முருகேசனுக்கு தலைவரிடம் அலாதி மரியாதை.
யாராவது எதாவது தப்பாச் சொன்னா கோவம் வரும்.
கண்மண் தெரியாமல் அடித்துக் கூட விடுவான்.
தலைவருக்காக உயிரையும் தரத் தயார்தான்.
மூணு நாளா வேலை இல்லை. இரண்டு நாள் எப்படியோ தள்ளியாச்சு.

குழந்தைகளுக்கு நாளையிலிருந்து கொடுக்க ஒண்ணுமில்லை. புரோக்கர் ரவி வந்து கூப்பிட்டார்.
கட்சிக் கூட்டங்களுக்கு போஸ்டர் ஒட்டறது, தோரணம் கட்டறது, கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பது கொடிகள் நடுவது இதெல்லாம் அவர்தான் காண்டிராக்ட்.
அவனுடைய தலைவருக்கு எதிரிக் கட்சிக் கூட்டமாம்.
ஊர்வலம், பொதுக்கூட்டம் இரண்டு நாள் வேலை
சாப்பாடு, போஸ்டர் ஒட்டுக் கூலி தனி.
எல்லாம் சேர்ந்து 2000 ரூபாய் வரும்.

ஆனா மனசு கேட்கவில்லை. பிடிவாதமாக மறுத்தான்.
பிச்சை எடுத்தாலும் இந்த கேவலமான வேலையை செய்ய மாட்டேன் என்றவனை நாய் வித்த காசு குறைக்கவா செய்யும்.
குடும்பத்தை,புள்ளயைப் பாரு என்று செல்லாயியும், ரவியும் கரைத்தனர்.
சரி வேற வழியில்லாமல் சம்மதித்து அட்வான்ஸ் இருநூறு ரூபாய் வாங்கியாச்சு.

ராவெல்லாம் கொசுக்கடியில் போஸ்டர் ஒட்டி முடிச்சிப்படுக்கும் போது மணி மூணு. காலையில ஆறு மணிகெல்லாம் பச்சைத்தண்னியை குடிச்சிட்டு, துரைப்பாக்கத்திலிருந்து தி. நகர் வந்து காத்திருந்தான்.



ஆட்டு மந்தை மாதிரி லாரியில் நூறு பேரோட ஏற்றிவிட்ட கட்சிக்காரர் ஆளுக்கு ஒரு சுலோக நோட்டீஸ் தந்து எப்படி சொல்லவேண்டும் என்று பயிற்சி கொடுத்தார். வழியேற வாழ்க ஒழிக கோஷம் போட்டபடி பயணம். ஆனால் தலைவர் ஒழிக மட்டும் சொல்ல மனசு இடந்தரவில்லை.

யாராவது சிலரோடு பேசிப் பார்க்கலாமே என்றால் அவர்களில் யார் கட்சிக்காரர், யார் தன்னைப்போல கூலிக்கு வந்தவர்கள் என்று தெரியவில்லை.எதாவது பேசப் போய் தன்னிலை மறந்து பேசிட்டால் பிரச்சனை வருவது மட்டுமில்லாமல் அடிவேறு கிடைக்கும். அதனால் ஒண்றும் பேசவில்லை. விவரம் விசாரித்தவர்களிடம் ரவி அண்ணன் ஆள் என்று மட்டும் சொல்லிக் கொண்டான்.

மத்தியானம் வரைக்கும் ஒண்ணுமேசாப்பிடதரவில்லை.
அப்புறம் ஒரு பிரியாணி பொட்டலமும், தண்ணி பாக்கெட்டும் கிடைத்தது.
மறைமலை நகர் பக்கத்தில் இறக்கிவிட்டனர்.அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் கூட்ட மேடை வரை ஊர்வலம். ஊர்வலம் தொடங்கி முக்கால் மணி நேரமாயிற்று. அரை குறைச் சாப்பாடு,
முந்திய நாள் தூக்கமின்மை எல்லாம் சேர்ந்து கண்ணை இருட்டியது. போதாத குறைக்கு பிடிக்காத கட்சி வேறு. திடீரென முன்னால் எதோ குழப்பம்.
எதிர் திசையில் கூட்டம் ஓடிவர தள்ளு முள்ளு. என்ன ஏதுன்னு தெரியதுக்குள்ள முருகேசனை நெடித்தள்ளியது கூட்டம்.


அடித்துவந்த வெள்ளம் மாதிரி தள்ளாடியபடி ஓடத்தலைப்பட்ட முருகேசனை மிதித்தபடி முன்னேறியது கூட்டம்.

காலையில் எல்லாப் பத்திரிக்கைகளிலும் முருகேசன் மற்றும் ஐம்பது பேரின் மரணம் தலைப்புச் செய்தியானது. கூட்டம் நடக்கவில்லை என்றாலும் அந்த தலைவர் மறு நாள் முருகேசன் வீட்டிற்கு ரவியோடு வந்து ஆறுதல் சொன்னார். இறுதிச் செலவுக்கு இரண்டாயிரம் தந்தவர், விரைவில் ஒரூ லட்ச ரூபாய் கட்சி நிதியிலிருந்து தருவதாக வாக்களித்தார்.

கட்சி ஆபிசுக்கு ரவி அண்ணனுடன் பலமுறை அலைந்து விட்டாள். அங்கே கட்சி உறுப்பினர் அட்டை கேட்டனர்.

செல்லாயிக்கு இரண்டு வருடத்திற்குப் பின் கட்சி தர இருந்த ஒரு லட்சம் ரூபாய் அவன் வேற கட்சி என்பதால் கிடைக்காமலேயே போனது.
ரவி புரோக்கரின் நிரந்தர ஆட்கள் பட்டியலில் செல்லாயி சேர்க்கப்பட்டு இப்போது இரண்டாண்டுகள் முடிந்து விட்டது. மாதம் நான்காயிரம் சம்பளமாம்.
கூட்டத்திற்கு தலைவர்கள் பெயர் வைக்க பிள்ளையோடு வேண்டுமாம். இதெல்லாம் முருகேசனின் நண்பன் பாண்டி நாலு நாள் முன்பு வீட்டில் வெள்ளை அடிக்க வந்த போது சொன்ன தகவல்.

No comments:

Post a Comment