Monday 30 May 2016

இரவு விடுதி நடனப் பெண்

கதிரவன் உதயத்தில் பார்த்த அந்தக் காட்சி

நேற்றைய பின்னிரவு பிறை நிலவும் எரியாத சோடிய விளக்குகள் தூணும் பார்த்ததுதான்

கடலில் கட்டு மரம் தள்ளிப் போனவர்களும்
இரவில் பாய்போட்டுத் தூங்கியவரும் அறியாதது



மண்ணும் உப்பும் கலந்த அந்தக் காற்றும், நீரும் தீண்டி போதும் எந்த சலனமும் அதற்கு இல்லை.

அம்மணம் மூடிய ஒரு இடுப்பு சேராத நீல ஜீன்ஸ் கால்சட்டை மேனியும், முதுகும் இரத்தம் உறைந்து கருநீல வரிகளாய்

மண்ணில் முகம் புதைந்து, வானுக்கு முதுகு காட்டிய மாநிற உடல் மீது கடற்காக்கைகள் உட்கார்ந்து கதை பேச

கடற்கரையில் கால் கழுவ வந்த காலைக் கடன் முடித்திருந்த வடநாட்டு சுற்றுலாப் பயணிகள்
கூட்டமும்

கண்டும் காணத மாதிரி ஒதுங்கியே போன தகவல் தரப் பயந்த நடக்க வந்த  ஓய்வூதியர்கள்

விரித்துக் கிடந்த  கைவிரல் நகங்களில் கருப்பு நகப் பூச்சும் கருப்பு பிளாஸ்டிக் வளையல்கள்

அந்தக் காவல் நிலையத்தில் அலறிய தொலைபேசியை எடுத்துப் பேச யாருமில்லை.

நேரம் ஆக ஆக கூடிய கூட்டத்தின் "உச்" கொட்டல்கள்.  "அறியாத வயசு", "பாவம், யாரும் பெத்த புள்ளையோ" சம்பாஷணைகள்.

காவலர் வந்து எடுத்துப் போன அதை கூறிட்டு அறிக்கை தயாரித்த  மருத்துவர்கள்

அருவெறுப்பின்றி காயம் கட்டுப் போடும் துணியில் கட்டிக் கிடத்திய பணியாளர்கள்

யாருக்கும் தெரியவில்லை அது யாரென்று.

நேற்றைய பின்னிரவில் அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் ஆட்டம் ஆடி விட்டு சம்பளம் பணம் வாங்கிக் கொண்டு

வயோதிகப் பெற்றோர், ஊதாரிக் கணவன், மனவளர்ச்சி குன்றிய பிள்ளை, கவலை மேகங்கள் மனதில் ஓட

தெருவிற்கு வந்து அழைப்பு ஊர்தி வரக் காத்திருந்த இடைவெளியில்

படகுக்காரில் சென்ற கழுகுகள் உயிர் போக கொத்திச் தின்று கடற்கரையில் எறிந்து விட்டுப் போனது

அந்த பின்னிரவு பிறைநிலாவுக்கு மட்டுமே தெரிந்திருந்தது
கழுகுகள் படுக்கையில் சுகமாகப் படுத்து உறங்கியதும்

இரை கடற்கரையில் செத்துப் கிடந்ததும்

வழியில் காசு கை மாறியதும்.

மறு நாள் நிலா வானுக்கு வரவில்லை. வானம் கருப்பு அணிந்தும்,
சோடிய விளக்குத் தூண்களில் புதிய விளக்குகள்

அது கிடந்த இடத்தில்  ஒளிப்பூ சொரிந்தும் அஞ்சலி செய்தன

No comments:

Post a Comment