Saturday 28 May 2016

சாந்தி சாந்தி சாந்தி

இரை எடுத்த கருப்பு மலைப் பாம்புச்  சாலைகள் சந்தித்த நாற்சந்திதனில்,

நின்ற உலோக தென்னை மரங்களின் உச்சிகளில் காய்த்தி்ருந்த ஒளித் தேங்காய்கள்

வழியோரக்கடைகள் நெற்றியில் கலர் கலராய் விலாசத் திருநீறு

ஓடி வந்த வாகனங்களில் கொள்ளிக் கண்கள்


இலை ஆடை களைந்த மரங்களின் மேனியை இச்சையுடன் தழவ வந்த மெல்லிய காற்று

மேகத்திரை போட்ட வானத்தில் பதுங்கிய விண்மீன்கள்

தாழப் பறந்த இயந்திரப் பறவையின் உறுமல்கள்

வண்ணங்களில் கண்ணடித்தும் முகம் காட்டாத தாரகைகள்

இவை பார்த்தபடி நகர எல்லை கடந்தால்,

தூரத்து மலையில் பற்றி எரியும் செந்நெருப்பு

எங்கிருந்தோ மிதந்து வரும் பாண்டி முனி உடுக்கொலி

கூடவே வரும் சில் வண்டுகளின் ரீங்காரம்

கடந்து காணமல் போகும் வாகனங்களின் சிவப்பு விளக்கொளிகள்

குரைக்காமல் கூட வரும் நாயாக நிழல்

இலக்கின்றி போகிறவனுக்கு பிடிவாதமாய் வழி சொன்ன மைல் கற்கள்





இருட்டுக்கும் தனிமைக்கும் என்றும் பொருத்தம்தான்
சாலை தாண்டி எதிர்ப்புறம் போக ஏதோ மோதிய நினைவு

வலியெடுத்த கால்களுக்கு ஆலமரத்தடி வேர்கள்

விழதுகளில் தொங்கியபடி ஆநிரைகளின் இளங்குடல் பெட்டிகள்

கண்ணயர்ந்த காலம் கேட்ட போல் இருந்த “வா போகலாம்” என்ற குரல் அந்தக் குரல் யாருடையது?

ஏதோ வெளி வந்தது ஒளியாய் மாறி ஒளி தேடி ஓட்டம்

ஓடிய அனைத்தும் ஒளியாக
கூட வர ஓட்டம் நின்றதும்

ஒளி நிறைத்தது
நிறைத்த ஒளியில் அனைத்தும் இணைந்து அடையாளம் அழிந்து
ஒன்றான ஜோதியாய்

சாந்தி சாந்தி சாந்தி.

No comments:

Post a Comment